தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

11 March 2019

காக்கும் கரங்கள்!

“மகளிர் தம் கருணைக்கும் அளவுண்டோ?”

08-03-2019 : உலக மகளிர் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி!

AIBSNLPWA, தூத்துக்குடி மகளிரின் கூட்டு முயற்சியில் மகளிரிடமிருந்து நன்கொடை பெற்று,
நல்லாயன் செவித்திறன் குறைந்தோர் உறைவிடம் மற்றும் லூத்தரன் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி மாணவச் செல்வங்களுக்கு,

 12லி.ஃபிரஷர் குக்கர் ஒன்று
இரண்டு  பர்னர் கேஸ் ஸ்டவ் ஒன்று,
 குளியல் சோப்புகள்  
மற்றும் எண்ணெய் பாக்கட்டுகள்
 ஆகியவற்றை வழங்கினர்.

 சேய் துயருறப் பொறுப்பாளோ, அன்னை? 







புறவிருந்து நோக்கி 
வரஇருந்து காத்துப் 
பெண்ணாய்ப் பிறந்ததனால், 
பிறந்தஇடம் வாழ்த்தப் 
புகுந்தஇடம் போற்றப் 
பொறுமை காத்திடுவர் - பெண்கள் 
பொறுமை காத்திடுவர்! 

வரவிருந்தால் சேமித்துக் 
குறையிருந்தால் நிறைவித்துக் 
குடும்பத்தைக் காத்திடுவர்; 
வரவில்லாப் பொழுதினிலே 
சேமிப்பைத் தந்துதவி 
உற்றுளி உதவிடுவர் - பெண்கள் 
உற்றுளி உதவிடுவர். 

குன்றாப் புகழுடைய 
மாதர் பலருண்டு 
கொண்டாடும் குணமுமுண்டு; 
பொன்றாத் துணையாய்க் 
கொண்டவர்பால் நின்று 
பொருந்தி வாழ்ந்தனரே - இசைபடப் 
பொருந்தி வாழ்ந்தனரே! 

அறவழியும் சத்தியமும் 
காத்துநின்ற காந்திக்கும் 
முன்வடிவு யாரென்பீர்? 
அறம்காத்தத் தில்லையாடி 
வள்ளியம்மை அறிவீரோ? 
அறம்காத்து உயிரிழந்தார் - மாண்பின் 
அறம்காத்து உயிரிழந்தார்! 

விஞ்ஞானம் கைக்கொள்வர் 
விண்ணையும் சாடிடுவர்! 
எல்லையில் அச்சுறுத்தும் 
அஞ்சலர் வெருண்டோட 
ஆயுதமும் கைக்கொண்டு 
வீரம் விளைக்க வந்தார் - குன்றா 
வீரம் விளைக்க வந்தார். 

போக்கிட மில்லாமல் 
பெண்ணில்லை காண்பீர்! 
புறங்காணல் என்றுமிலை; 
போற்றும் நீதியினால் 
புவியாள வந்துற்ற 
பெண்கள் உயர்ந்தவரே! - என்றும் 
பெண்கள் உயர்ந்தவரே! 

சட்டங்கள் திட்டங்கள் 
அத்தனையும் ஆளவந்தார்; 
சாற்றும் நெறிகண்டு, 
பட்டங்கள் பலபெற்று 
பாரினில் ஓங்கிநின்றார்; 
வாழிய வாழியவே!- பெண்கள் 
வாழிய வாழியவே!