தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

15 February 2019

மத்தியச் செயற்குழு அமர்வு - கன்னியாகுமரி

இடம் : விவேகானந்தா கேந்திரம், கன்னியாகுமரி 
நாள் : 13-02-2019 மற்றும் 14-02-2019 

13-02-2019 அன்று காலை 10:00 மணிக்கு அ.இ.தலைவர் தோழர் இராமன் குட்டி சங்கக் கொடியினை ஏற்றிக் கூட்டத்திற்குத் தலைமையேற்றுத் தொடக்கிவைத்தார்.

கூட்டத்தில் 29 அகில இந்திய நிர்வாகிகளும் 15 மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். 

முதன்மையாக, கூட்டத்தில் நமது முக்கிய கோரிக்கையான 7வது சம்பளக் குழு அடிப்படையிலான ஓய்வூதிய மாற்றம் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது. 

13-02-2019 அன்று காலை, அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் பி.கங்காதரராவ் அவர்கள், பூரி மாநாட்டுக்குப் பிந்தைய செயல்பாடுகளை விளக்க உரையாகத் தந்தார். நண்பகலுக்கு அடுத்து அனைத்து மாநில நிர்வாகிகளும் மாநிலச் செயல்பாட்டு உரைகளைத் தந்தனர். 

08-02-2019ல் புது தில்லியில் நடைபெற்ற மாபெரும் பேரணி குறித்தும் அதில் பெருமளவு கலந்துகொண்ட அரியானா, உ.பி மற்றும் புதுதில்லி MTNL ஓய்வூதியர்களின் பங்கு குறித்தும் வெகுவாகச் சிலாகிக்கப்பட்டது. 

14-02-2019 காலை மாலை இருவேளையிலும் ஓய்வூதியர் மற்றும் BSNLல் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் ஆழமாக விவாதிக்கப்பட்டன. இதில், அகில இந்திய நிர்வாகிகளும் மாநில நிர்வாகிகளும் தங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து விவாதத்தில் பங்கேற்றனர். 

மேலும், பத்ரிகா, மருத்துவப் படி குறித்த விவாதங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. 

பூரி மாநாட்டில் மேற்கொண்ட முடிவின்படி, 22-11-2018 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வெகு சிறப்பாக மேற்கொண்ட அனைத்து கிளைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப் பெற்றது. ஏறக்குறைய 35000 அஞ்சலட்டைக் கோரிக்கைகள் பாரதப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

8 ஓய்வூதியர் சங்கங்கள் இணைந்த CBMPA குழுவின் சிறப்பான செயல்பாடுகள் பாராட்டப்பெற்று, நமது ஓய்வூதியக் கோரிக்கை வென்றெடுத்த பின்னரும், கூட்டுக் குழுவினத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

அ.இ.தலைவர், பொதுச்செயலர், தமிழ் மாநிலச் செயலர் மற்றும் சென்னையில் உள்ள அ.இ.நிர்வாகிகள் ஆகிய 10 பேர் இணைந்த தலைமைச் செயலகம் (SECRETARIAT) ஏற்படுத்தப்பெற்று, தற்போதைய சூழலில் அவசர முடிவுகள் எடுத்து நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. 

பெங்களூரில் நமது மத்தியத் தலைமையகம் செயல்பட வாடகையில்லாத இடவசதி ஒதுக்கித் தந்த NFTE பெங்களூர் சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கணிணி மற்றும் பிரிண்டர் தந்த தோழர் பாபுவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

மாநில மற்றும் மாவட்டச் செயலர்களுக்கு 2 பிரதி வீதம் பத்ரிகா அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது பதிப்பாக, 2000 பிரதிகள் ‘PENSION IS RIGHT' நூல் புதிய திருத்தங்களுடன் அச்சடிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டது.

தணிக்கை செய்யப்படாத வரவு செலவும் அ.இ.பொருளாளரால் வாசிக்கப்பெற்று கூட்டத்தில் முன் வைக்கப்படடது. 

இரண்டாவது நாள் முடிவு செய்யப் பெற்ற வெகு சிறப்பான தீர்மானங்களுடன், மாலை 5:00 மணிக்கு, கூட்டத் தலைவரால் தேதி குறிப்பிடப்படாமல் மத்தியச் செயற்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.